வகை (2) சுற்றுப்புறச் சூழல் – கட்டுரைப் போட்டி – 2015


சுற்றுப்புறத் தூய்மையே வாழ்வுதரும்

முன்னுரை
‘சுத்தம் சோறு போடும்’ என்பது பழமொழி. இப்பழமொழி தூய்மையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. மக்கள் அனைவரும் தூய்மையான சூழ்நிலையையே விரும்புகிறார்கள். தன்னையும் தன் வீட்டையும் மட்டும் தூய்மையாக வைத்துக்கொண்டால் போதாது. தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாகத் வைத்திருந்தால்தான் நோய் வராது. இல்லையென்றால் தொற்று நோய்கள் பரவி உடல் நலத்தைப் பாதிக்கச் செய்துவிடும். வீடு தூய்மையாக இருந்தால் தான் ஊர் தூய்மையாக இருக்கும். ஊர் தூய்மையாக இருந்தால்தான் நகரம் தூய்மையாக இருக்கும். நகரம் தூய்மையாக இருந்தால் தான் நாடே தூய்மையாக இருக்கும். இதைத்தான் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு’ என்கிறோம். சுற்றுப்புறத் தூய்மைக் கேடு குறித்தும், அதனை எவ்வாறு நீக்க வேண்டும் என்பது குறித்தும் இக்கட்டுரை முன்வைக்கின்றது.
வள்ளுவர் கூறும் தூய்மை
            புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
என்ற குறளில் (298) வள்ளுவர், தூய்மை இருவகைப்படும் என்கின்றார். ஒன்று: அகந்தூய்மை. மற்றொன்று: புறந்தூய்மை. உள்ளதைத் தூய்மைப்படுத்த உண்மை பயன்படுகிறது. உடல் அசுத்தத்தைப் போக்கவும், கழிப்பிடங்கள், உடைகள், சமையல் பாண்டங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தத் தண்ணீர் பயன்படுகிறது என்று கூறியுள்ளார். ஆகவே, சுற்றுப்புறத் தூய்மைக்குத் தண்ணீர் இன்றியமையாதது. அதனை மாசுபடாமல் காப்பது அவசியமாகும். தண்ணீர் மட்டுமின்றி சுற்றுப்புறத்தில் நமக்குத் தேவையாக இருக்கும் அனைத்தையும் மாசுபடாமல் காத்தல் அவசியமே.
தனிநபரால் ஏற்படும் சுற்றுச்சுழல் சீர்கேடும் தவிர்க்க வேண்டியனவும்
நமக்குத் தேவையற்ற பொருட்களையும், குப்பைகளையும் எல்லா இடங்களிலும் போடுகிறோம். அவ்வாறு போடுதல் கூடாது. அதனை மூடியிட்ட குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடுதல் வேண்டும். சாக்கடைநீர் எல்லாம் பெரும்பாலும் அசுத்தமாகவும், கொசுக்களின் வாழ்விடமாகவும் இருந்து வருகின்றன. கொசுக்களால் மலேரியா, டெங்கு போன்ற பல நோய்களும் உண்டாகின்றன. ஆகவே சுற்றுச்சூழல் கெடாத நிலையில் சாக்கடை நீரை தனி வாய்க்கால் மூலம் (மூடப்பட்ட) நெடுந்தூரம் கொண்டு சென்று, பயன்படாத நிலங்களில் பாய்ச்சிப் புற்களை வளர்க்கலாம். அந்நீரை ஒருபோதும் ஆற்றில் கலக்கக் கூடாது.
வெளியிடங்களில் எச்சில் உமிழ்தலும், மலம் கழித்தலும் தவிர்க்கத் தக்கனவாகும். இவை சுற்றுப்புறங்களில் தூய்மையைக் கெடுப்பவை. இன்றும் பெரு நகரங்களில் உள்ள சந்துகளும், சிறு தெருக்களும் சாக்கடைநீர் நிரம்பி ஓடும் இடங்களாக இருக்கக் காண்கிறோம். இது தவிர ஆறு, குளங்கள், ஏரிகளை அசுத்தம் செய்கின்றவர்கள் பலர் இருகின்றனர்.
           நம் நாடு கிராமங்கள் கொண்ட நாடு. பெரும்பாலான கிராமங்கள் கழிப்பிடங்கள் இல்லாமல் காணப்படுகின்றன. அதனால் அசுத்தம் ஏற்படுகிறது. இந்த நிலையைப் போக்க வேண்டும். சுற்றுப்புறங்கள் தூய்மையாக இருந்தால் தான் நோய்கள் நம்மை அணுகாது.
           வெளியிடங்களில் காகிதங்களையோ, நெகிழி (plastic) உரைகளையோ, காலி பாட்டில்களையோ, குப்பைகளையோ போடாமலும் ஆங்காங்கே எச்சில் உமிழாமலும் இருந்து சுற்றுப்புறங்களை மாசுபடாமல் காத்தல் வேண்டும்.
நிறுவனங்களால் சுற்றுப்புறத் தூய்மைக் கேடும் தவிர்க்க வேண்டியனவும்
நம் நாட்டில் அறிவியல் வளர்ச்சியாலும் தொழில் வளத்தாலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்றது. அதனால், ஆங்காங்கு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தத் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர், கழிவுப்பொருட்கள், புகை போன்றவற்றால் சுற்றுப்புறத் தூய்மை பெரிதும் மாசுபடுகின்றது. அதில் உள்ள அமிலங்கள் தூய்மையான நீரில் கலந்து நீரை மாசுபடுத்துகின்றது. அந்நீரைப் பருகும் மக்களும் பிற  உயிரினங்களும் பாதிப்பு அடைகின்றன. அதனால் பலவித நோய்கள் உண்டாகின்றன. அதுமட்டுமின்றி அத்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆற்றோடும் கடலோடும் கலக்கின்றன. அவை நீர்வாழ் உயிரினங்களையும் பாதிக்கின்றன. எனவே அக்கழிவு நீரால் எந்த உயிரினமும் பாதிப்பு அடையாத வகையில் வெளியேற்றத் திட்டமிடல் வேண்டும். அத்திட்டங்கள் குறித்த சில எண்ணங்கள் வருமாறு:
1.    பயன்படுத்தப்படும் நீரின் கழிவுகளை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துதல்.
2.    அமிலங்கள் கொண்டவற்றை அமிலங்களின் தாக்கம் இல்லாதவாறு அதன் செயல்பாட்டை நிறுத்தி, பின் பாதுகாப்பான முறையில் வெளியேற்றல்.
3.    அவை ஆற்று நீருடன் கலக்காமல் வேறு வழியில் வெளியேற்றல்.
4.    இதனைப் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடத்தும் அமைய வழிவகை செய்தல்.
5.    தொழிற்சாலைகளை இயக்குபவர்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையைக் கையாளுதல்.
6.    தொழிற்சாலைகளை அமைக்கும் போதே பாதுகாப்பு வழிமுறைகளையும் அமைத்தல்.
7.    கல்லூரி, பள்ளிகளில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முன்வருதல்.
8.    சுற்றுச்சுழல் விழிப்புணர்வு இயக்கமாக ஒவ்வொரு கல்விசார், கல்விசாரா நிறுவனங்களில் ஏற்படுத்துதல்.
9.    இயற்கை நமக்கு அளிக்கும் கொடையை கிராமங்கள் தோறும் எடுத்துக் கூற இளைஞர்களை ஊக்குவித்தல்.
இதனால் நோய்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன.
நல்வாழ்வுவாழ விரும்பும், ஒவ்வொருவருக்கும் தூய்மையான காற்றும் தண்ணீரும் மிக மிகத் தேவையானவை. இவை தொழிற்சாலைகளால் தடைபடுகின்றன. தொழில் வளர்ச்சியும் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளும் பாதிப்படையாமல் சிந்தித்துச் செயல்படல் வேண்டும்.
            குடிப்பதற்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் நீர்நிலைகளில், அழுக்குநிறைந்த ஆடைகளைத் துவைப்பதும் உடலைக் கழுவுவதோடு மட்டுமில்லாது, ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவதும் மோசமான செயல்களாகும். இதனால் நோய்க்கிருமிகள் உற்பத்தியாகி, உயிருக்கே ஆபத்து வருகின்ற அபாய சூழ்நிலைகள் உருவாகிவிடும்.
நிலங்கள் மற்றும் காடுகளைப் பாதுகாத்தல்
நிலம் நம் வாழ்விடம். அதனை மாசுபடுத்துதல் குற்றமாகும். தேவையற்ற பொருட்களான அமிலங்கள் வெளியேறும் பொருட்கள் அனைத்தும் நிலங்களுக்குத் தீங்கு விளைவிப்பன. அவற்றினைச் சரியான முறையில் அப்புறப்படுத்துதல் அவசியமாகும். காடுகளை மாசுபடுத்துவதால் விலங்குகளும் பிற உயிரினங்களும் பாதிப்படைகின்றன. காடுகள் நம் நாட்டின் நுரையிரல்களாக விளங்குகின்றன. அவை நாம் சுவாசிக்கும் காற்றினைத் தூய்மை படுத்தித்தருகின்றன. அவற்றினை மாசுபடுத்தி அழித்தல் தவறு. காடுகள் நம்மின் ஆதித்தாய். அதனை அழித்தல் நம்மை நாமே அழிப்பதற்கு நிகராகும். அதனை அனைவரும் உணர்ந்தால் பாதுகாக்கும் பான்மை மேலோங்கும்.
நாம் அனைவரும் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு நம் சுற்றுப்புறங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நம்மால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பொருட்களின் குப்பைகளைத் தகுந்த முறையில் வெளியேற்ற வேண்டும். அவற்றில் உரமாக மாறக்கூடிய தன்மை உடைய குப்பைகளை வீட்டிற்குப் பின்புறம் குழிகளை அமைத்து அதில் போட்டு வைத்தால் அவை பின் உரமாகப் பயன்படும். தண்ணீர் மாசுபடுவதைத் தடுத்தால் பல நோய்களைத் தடுக்கலாம். இவ்வாறு பல பாதுகாப்பு முறைகள் உள்ளன. அவற்றினைப் பின்தொடர்தல் அவசியமாகும்.
முடிவுரை
சுத்தமாக இருந்தால்தான் நாம் என்றும் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதனை உணர்ந்து, சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். சுற்றுப்புறங்களைப் பாதுகாப்போம் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வாக அமையும் என்பதை இங்கு வலியுறுத்தலாம்.
சு. கஸ்தூரி,
                   உயிர்த்தொழில் நுட்பவியல் துறை,
இளங்கலை இரண்டாம் ஆண்டு,
                             இந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லூரி,
                             கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
                             8344742179,
                                                                                      kasthuri.prabha3@gmail.com                                                                                    

சுற்றுப்புறத் தூய்மையே வாழ்வுதரும் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்குமுன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.



Comments

  1. வணக்கம்...

    போட்டி விதிமுறைகளின் படி தங்களின் விவரங்கள் பதிவு செய்யா வேண்டும்... நன்றி... அதற்கான இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_5.html

    அன்புடன்
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  2. வணக்கம் அருமையான கருத்துடைய கட்டூரை! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம்... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு உங்களை வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.வாழ்த்துகள் வெற்றி பெற..

    ReplyDelete
  4. தொடர்ந்து எழுதுக! முயற்சிதான் கூலி தரும்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செல்லம்மா...

யாதுமாகி நின்றாள்